Only for GDS by GDS - India Post

Only for GDS by GDS - India Post

Sunday 25 June 2017

இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!

இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!

ஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.


இதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.

இந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.

சென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள்,  2 ஆயிரத்து 515 துணை தபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment